காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்காகச் சென்ற நில அளவைத் திணைக்களத்தினர் மக்களாலும் அரசியல் பிரமுகர்களாலும் முற்றுகையிடப்பட்டுள்ளனர்.
மண்டைதீவு இந்து ஆலயத்திற்கு அண்மையில் உள்ள காணியினை கடற்படையினரின் தேவைக்காக அளவீடு செய்வதற்கான முயற்சிகள் கடந்தகாலங்களிலும் இடம்பெற்றிருந்த நிலையில் இன்றும் மீளவும் அளவீடு செய்வதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ளன.
இது குறித்த தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இன்று அங்கு கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராஜா கஜேந்திரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் எனப் பெருமளவானவர்கள் அங்கு கூடி தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
இதன் பின்னர் அங்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினரின் வாகனம் மக்களால் சுற்றிவளைக்கப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.அங்கு பிரசன்னமாகியிருந்த காணி உரிமையாளர்கள் தமது காணியின் உறுதி உட்பட்ட ஆவணங்களை திணைக்கள அதிகாரிகளுக்கு காண்பித்தனர்.
இந்நிலையில் காணி அளவீட்டினை மேற்கொள்ள முடியாத நிலையில் திணைக்கள அதிகாரிகள் திரும்பிச் செல்லத் தீர்மானம் எடுத்திருப்பதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் அங்கிருந்து தெரிவிக்கின்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்